தன்னைத் தாக்கிய கணவர் மீது நடிகை அளித்த புகாரை அடுத்து, பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.
இந்தியில் வெளியான லவ் ஸ்டோரி 2050, பிளடி இஷ்க், பஸ்தி ஹே சஸ்தி உட்பட சில படங்களில் நடித்தவர் கரண் மெஹ்ரா. ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். இவரும் இந்தி நடிகை நிஷா ராவலும் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். ஹஸ்டி ஹஸ்டி, ரஃபூ சக்கார் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் நிஷா, டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் கரண் மெஹ்ராவுக்கும் அவர் மனைவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை இரவு, கரண் மெஹ்ரா தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தனது தலையை சுவரில் மோதி காயம் ஏற்படுத்தியதாகவும் மும்பை கோரேகான் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கரண் மெஹ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தி சின்னத்திரையில் பிரபலமான கரண் மெஹ்ரா, கைது செய்யப்பட்டிருப்பது ரசிகர்களி டையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







