ராமநாதபுரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பணியின்போது கவனக்குறைவாக இருந்த 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த கைதிகள் முகம்மது முகைதீன் என்ற கட்டி முகம்மது, ரமேஷ், சுதாகரன் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைதிகளுடன் பாதுகாப்புக்கு இளஞ்செம்பூர் காவல் நிலைய தலைமைக்காவலர் ராமபாண்டி, காவலர் அன்பரசன் மற்றும் தேரிருவேலி காவல் நிலையக் காவலர் திராவிட செல்வன் ஆகியோர் சென்றனர். இந்தநிலையில், முகம்மது முகைதீன் தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் ஏர்வாடி தர்கா பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பணியின்போது கவனக்குறைவாக இருந்த ராமபாண்டி, அன்பரசன், திராவிட செல்வன் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
தப்பிய கைதி முகம்மது முகைதீனைக் கைது செய்த ஏர்வாடி முதல்நிலைக் காவலர் பாலமுருகனை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
ராமநாதபுரம் பகுதியில் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







