ரயில்களில் எக்னாமிக் மூன்றாம் அடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகள் உருவாகி வருகின்றன.
சாத்தியமுள்ள பட்ஜெட்டில் ஆடம்பரமான ரயில் பயணம் என்பது விரைவில் சாத்தியமாகிறது. தற்போது ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் அடுப்பு, மூன்றாம் அடுக்கு என்ற அளவில்தான் ஏசி வகுப்புகள் உள்ளன. புதிதாக உருவாகும் எக்கனாமிக் ஏசி வகுப்பு 83 படுக்கைகள் கொண்டதாக உள்ளது. மூன்றாம் அடுக்கு ஏசி வகுப்பில் உள்ள 72 படுக்கைகளை விட இது அதிகம். ஆனாலும் பயணிகளுக்கான வசதியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்படவில்லை என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கபுர்தலாவிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் எக்கனாமிக் வகுப்பு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் படிப்பதற்காக மின் விளக்குகள், ஏசியின் அளவை மாற்றியமைக்கும் வென்ட்கள், யுஎஸ்பி சார்ஜர் ஆகியவை ஒவ்வொரு படுக்கையிலும் இடம்பெற்றிருக்கும். தீ தடுப்பு படுக்கைகள், நடு மற்றும் மேல் படுக்கைக்கு செல்லும் ஏணிகள், ஸ்னாக்ஸ் மேசைகளும் இடம்பெறும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணிப்பதை விட குளிர்பதன வசதியுடன் கூடிய பெட்டிகள் சிறந்த அனுபவத்தை ரயில் பயணிகளுக்குத் தரும். மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லும் ரயில்களில் இந்த பெட்டிகள் இடம்பெறும். மூன்றாம் அடுக்கு ஏசி வகுப்புக்கு அடுத்த இடத்திலும், ஸ்லீப்பர் வகுப்புக்கு முந்தைய இடத்திலும் இந்த எக்னாமிக் ஏசி வகுப்பு இருக்கும். எக்கனாமிக் வகுப்புக்கான கட்டணம் என்பது இந்த இரு வகுப்புகளுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையாக இருக்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.