’மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி’ என்று ஜனநாயகத்திற்கு புதிய விளக்கம் தந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்காவின் கெண்டகியில் தாமஸ் – நான்சி ஹாங்க்ஸ் தம்பதிக்கு மகனாக பிறந்தார். வீட்டில் இருந்து மலைகளை கடந்து தினமும் 15 கிலோ மீட்டர் நடந்து சென்று கல்வி பயின்ற இவர், குடும்ப வறுமை காரணமாக தச்சு வேலை, செருப்பு தைக்கும் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தார். பிறருக்கு உதவி, எப்போதும் கலகலப்பு, கதைசொல்லி என பல்வேறு பரிமானங்களாக செயல்பட்ட லிங்கன், பலரின் அன்பையும் பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூ ஆர்லியன்ஸ் நகர் சந்தையில் அடிமைகளாக கறுப்பினத்தவர்கள் விற்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு மனம் துடித்தார். மனிதர்களே, மனிதர்களை அடிமையாய் விற்பனை செய்யும் கொடுமைக்கு முடிவுக்கு கொண்டு வர இளம் வயதிலே உறுதி பூண்டார். தனது 23வது வயதில் black hawk போரில் ஆபிரகாம் லிங்கன் பங்கெடுத்தது, அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.
ஆபிரகாம் லிங்கன், 1833-ல் காதலி ரூத்தை மணந்தார். 2 ஆண்டுகளில் ரூத் மறைந்ததால், 1842-ல் மேரி டாட்டை மணந்தார். இளம் வயதில் அலுவலக குமாஸ்தா, அஞ்சல்காரர், வழக்கறிஞர் என பல தொழில்களை மேற்கொண்டார். அரசியல் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த லிங்கன், 1834-ல் இலினோய் மாகாண உறுப்பினரானார்.
அதிபர் தேர்தலின்போது ஒரு சிறுமியின் கடித ஆலோசனையை ஏற்று தாடி வளர்த்துக்கொண்ட ஆபிரகாம் லிங்கன், 1860-ம் ஆண்டில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார். 1862 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து அமெரிக்காவில் அடிமைத்தனம் இல்லை என பிரகடனம் செய்தார். 13-வது அரசியல் திருத்தம் மூலம் அடிமை முறையை ஒழித்தார்.
அதிபரான லிங்கனை பார்த்து எம்பி ஒருவர் “உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது” என்றார். எம்பியின் நக்கலான கேள்விக்கு, “செருப்பு கிழிந்தால் தைத்து தருகிறேன். எனக்கு நாடாளவும் தெரியும்” என்று லிங்கன் பதிலடி கொடுத்தார்.
அடிமை முறை ஒழிக்கப்படும் என்ற ஆபிரகாம் லிங்கன் அரசின் அறிவிப்பை, கறுப்பினத்தவர்கள் கொண்டாடி தீர்த்தனர். அடிமை முறை ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தென்பகுதி மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்தன. 1865-ல் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் தீர்மானம் அமெரிக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வாஷிங்டனில் நாடகம் ஒன்றை பார்த்து கொண்டிருந்தபோது ஆபிரகாம் லிங்கன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். உலக கடிகார நிறுவனங்கள், ஆபிரகாம் லிங்கன் சுட்டு கொல்லப்பட்ட நேரமான 10:10-ஐ , அவரது நினைவாக, விளம்பர கடிகார நேரமாக வைத்துள்ளன.
- ரா.தங்கபாண்டியன்.