ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதாக, பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை கவிஞர் வைரமுத்து திரும்பப் பெற்றுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து நாளிதழ் ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டுரை எழுதியிருந்தார். அதில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாகக் கூறியிருந்தார். அந்த கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து வுக்கு எதிராக பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா, கடுமையான வார்த்தைகளில் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைரமுத்துவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ’ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று’ என்று வைரமுத்து விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிராகக் கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யபப்ட்டது. அந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி, 2017 ஆம் ஆண்டு வைரமுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அந்த மனுவை கவிஞர் வைரமுத்து திரும்பப் பெற்றுள்ளார். விசாரணையைச் சந்திக்க தயாராக இருப்பதால், வழக்கை திரும்ப பெறுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.







