போச்சம்பள்ளி அருகே ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு குடும்பத்தை 9 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வாணிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன், அவரது தம்பி சசிக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு கோயில் நிலம் தொடர்பான மோதலில், காயமுற்ற உறவினர்களுக்கு இவர்கள் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இக்கொடுமை 9 ஆண்டுகளாக நீடிப்பதாகவும் கிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, அண்ணன், தம்பி இருவரை யாரும் திருமணம் செய்யக்கூடாது என தடுத்துள்ளதாகவும், பிற கிராமத்தினரையும் தங்கள் குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க கூடாது என தடுத்து வருவதாகவும் சசிகுமார் புகார் தெரிவித்துள்ளார். இதனால் 50 வயதை நெருங்கிய அண்ணன் கிருஷ்ணனுக்கும் திருமணம் ஆகவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கொரப்பநாயக்கன்பட்டி ஊர்நாட்டாண்மை ராமமூர்த்தியிடம் கேட்டபோது, கிருஷ்ணன்- சசிகுமார் இருவரும் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார். உண்மையில் அவர்கள் இருவரையும் கண்டு ஊர்மக்கள் தான் பயப்படுவதாக ராமமூர்த்தி கூறினார்.