வயதான மூதாட்டி அமரும் வகையில் நாய் ஒன்று சிறிய இருக்கை (ஸ்டூல்) எடுத்து சென்று தரும் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பூனையும், நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், நாய்க்கு இருக்கும் மதிப்பே தனிதான்.. மற்ற பிராணிகளைவிட மனிதனின் நம்பிக்கைக்கு உரிய உயிரினமாக நாய் இருந்து வருகிறது. நாய்கள் வீட்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம். குறிப்பாக திருட்டு மற்றும் மற்ற விலங்குகளிடம் இருந்து நம்மை பாதுகாப்பதில் நாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
சில நேரங்களில் எஜமானர்களுக்காக வனவிலங்குகளுடன் சண்டையிட்டு நாய்கள் உயிரிப்பதும் உண்டு. நாய் நன்றியுள்ளது என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன.
அந்த வகையில் ஜிபேடன் என்பவர் ட்விட்டரில் அழகான வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். வயதான மூதாட்டிக்கு நாய் ஒன்று இருக்கை ஒன்றை எடுத்து சென்று தருகிறது. பின்னர் அந்த இருக்கையில் மூதாட்டி அமர்ந்தவுடன் அவரின் மடியில் செல்லமாக கால் போட்டு அமர்ந்து கொள்கிறது அந்த செல்ல நாய். இந்த வீடியோ வெறும் 45 விநாடிகள் தான். ஆனால் வீடியோ வெளியிட்ட இரு நாட்களில் அதிகமான லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.





