பெரு நாட்டில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
தென்அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
அரேக்விபா பகுதியில் உள்ள லா எஸ்பெரான்சா சுரங்கத்திற்குள் உள்ள சுரங்கப்பாதையில், மின் கம்புகள் தீ பிடித்து எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதென, பெரு காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் உறுதி செய்துள்ளனர்.
இங்கு, 100 அடிக்கும் கீழே, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியாற்றி வந்தனர். அப்போது திடீரென தீப்பற்றி, சுரங்கம் முழுதும் பரவியது.தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 27 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.







