நாகையில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் புகுந்த
இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இந்திய கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை அலுவலக சுற்றுச்சுவரில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஏறி குதித்து அலுவலகத்திற்குள் புகுந்தார். இதனை எதிர்பாராத கடற்படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து , கடற்படை அதிகாரிகள், நாகை நகர காவல் நிலையத்தில் அந்த
நபரை ஒப்படைத்தனர். மேலும், போலீசார் விசாரணையில், அவர் கேரளா
மாநிலம் எர்ணாகுளம் கடதிபரம்ப புள்ளுறிட்டி பகுதியை சேர்ந்த , நிஸாத்
என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதும் தெரியவந்தது.
இவர் சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சென்னைக்கு சென்று விட்டு,
அங்கிருந்து ரயில் மூலம் நாகூர் தர்காவுக்கு வந்து தங்கி உள்ளார். இந்நிலையில்,
இந்திய கடற்படை அலுவலக சுற்றுச் சுவரில் ஏறி குதித்துள்ளார். எதற்காக
இங்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
—கு.பாலமுருகன்







