மகளிர் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும்பான்மை அரசாங்கத்தைக் கொண்ட ஒரு நாடு எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணியினர் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தனர். அந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை நான் வாழ்த்துகிறேன். செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டோம். இந்த வரலாற்றை உருவாக்க மக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறோம்.
சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறனை கொண்டுள்ளன, அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும்பான்மை அரசாங்கத்தைக் கொண்ட ஒரு நாடு எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது. யாருடைய அரசியல் சுயநலன்களும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைத் தடுக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பெரும்பான்மையே இந்த அரசால் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது. அனைத்து நிலைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான முடிவுகளை நாங்கள் எடுத்தோம்,
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முழு பெரும்பான்மை அரசு, வலுவான அரசு, தீர்க்கமான அரசு அவசியம் என்பதை இந்த சட்டம் நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.