மயிலாடுதுறையில் தனியார் உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி வெந்து போய் கருகி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியை சேர்ந்தவர் செல்வம்.
இவர் 8 மாத கர்ப்பிணியான தனது மகள் செல்வ லட்சுமியை மருத்துவ பரிசோதனை
செய்வதற்காக இன்று காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். தனது மகள் சாப்பிட வேண்டும் என்று
கூறியதால் பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
எதிரே உள்ள அம்பி மெஸ் என்ற சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கே செல்வ லட்சுமி பொங்கல் வடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். வடையை
சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததால் அதிர்ச்சி
அடைந்தார். இது குறித்து கடை நிர்வாகத்தினரிடம் கூறவே உடனடியாக வேகமாக வந்த
கடை நிர்வாகத்தினர் கருவேப்பிலை கிடக்கும் என்று இலையிலிருந்த வடையை
பிடுங்கி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை செல்வம் மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தார். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி பெண் நலமுடன் வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையினரிடம் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பெயரில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு பதில் அளிக்க உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உயர்தர சைவ உணவகத்தில் கரப்பான் பூச்சி கிடந்தது தற்போது போண்டாவில் பல்லி வெந்து கிடப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில்
செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின்
எதிர்பார்ப்பாக உள்ளது.







