கர்ணன் திரைப்படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு!

பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை வெளியிட தடைகோரிய வழக்கில், திரைப்பட தணிக்கைத்துறை மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சுப்பிரமணியபுரத்தைச்…

பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கும் வரை நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை வெளியிட தடைகோரிய வழக்கில், திரைப்பட தணிக்கைத்துறை மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த ஜனவரி 19ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாக இருக்கும் நடிகர் தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்திலுள்ள பண்டாரத்தி புரானம் என்னும் பாடலில் இடம்பெற்ற சில வரிகள் சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கிறது. இது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார். அந்த பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்தும் நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்ணன் திரைப்படத்தின் திரைப்பட தணிக்கைத்துறை அலுவலர், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think music India யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.