மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் : பள்ளி முடிந்து சென்ற போது நேர்ந்த சோகம்!

சென்னையில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை சாலையில் சென்ற மாடு முட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9) எம்.எம்.டி.ஏ காலணியில்…

சென்னையில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை சாலையில் சென்ற மாடு முட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9)
எம்.எம்.டி.ஏ காலணியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து
வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பாணு அவரது இரு
மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

எம்.எம்.டி.ஏ காலணி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது
அவ்வழியாக 7 மாடுகள் சென்ற நிலையில், அதில் ஒரு மாடு திடீரென சிறுமி ஆயிஷாவை
கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல்
குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி
சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி
உள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த சிறுமி ஆயிஷாவை அவரது தாய் மீட்டு சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். .இது குறித்து அரும்பாக்கம் காவல்
நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற உரிமையாளர் அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக்(26)மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உரிமையாளர் விவேக்கிடம் போலீசார் தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாலையில் சென்ற சிறுமியை மாடு குத்தி பந்தாடும் பதறவைக்கும்
சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.