ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அந்த பெட்டியின் மேற்கூரையின் வழியாக மழை நீர் வழிந்தோடுவதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை – இந்தூர் இடையிலான ரயில்களில் மிக முக்கியமானது அவந்திகா எக்ஸ்பிரஸ், கடந்த ஜூன் 25 அன்று இந்த ரயிலின் இரண்டாவது குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அந்த பெட்டியின் மேற்கூரையின் வழியாக மழை நீர் வழிந்தோடுவதை கண்டவுடன், அதனை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த பதிவில் “இந்திய ரயில்வே துறை ஏசி பெட்டியில் ஷவர் வசதி செய்து கொடுத்துள்ளது” என கிண்டலாக விமர்சித்திருந்ததோடு, அந்த ட்விட் பலரது கவனத்தையும் பெற்று வைரலானது. இதனை தொடர்ந்து இந்திய ரயில்வே திறந்த மழையுடன் கூடிய புதிய கோச்சை அறிமுகப்படுத்தியுள்ளது என கிண்டல் செய்து பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்த நிலையில், அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரயில்வே துறைக்கு பல கேள்விகளை முன்வைத்துள்ளது.
https://twitter.com/INCIndia/status/1672898475325812736?s=20
அதில் வெற்று பிரச்சாரத்திற்கு பதிலாக, ரயில்வேக்காக நாம் எதாவது செய்துள்ளோமா ? என்று எண்ணி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். ரயில்வே அமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கிண்டலாக பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் உடனடியாக கவனிக்கப்பட்டதாகவும், அவந்திகா எக்ஸ்பிரஸின் அனைத்து பெட்டிகளும் சோதனை செய்யப்பட்டதாகவும், இப்போது அப்படி எந்த பிரச்னையும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







