தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் உரையாற்றி அவர், “கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார் அமைச்சர் ஆர்.காந்தி” என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராணிப்பேட்டையை காந்திபேட்டை என்று சொன்னால் கூட பொருத்தமாக இருக்கும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற அடிப்படையில் அரசு செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு தனி நபரின் கருத்தை கேட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பனப்பாக்கம் பகுதியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி பூங்கா அமைக்கப்படும். இதனால் 20,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த பூங்கா சர்வதேச தரத்தில் அமைக்கப்ப4டும்.
https://twitter.com/mkstalin/status/1542379532904443904
இந்த அரசு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 80 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது. பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டதாக சிலர் கருதுகின்றனர். 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கு எதற்கு விளம்பரம்? நரிக்குறவர், இருளர் இல்லத்திற்கு சென்றதன் மூலம் இது நமது அரசு என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்துள்ளோம். நரிக்குறவர், இருளர், பழங்குடி மக்களுக்கு பல்வேறு அரசு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/mkstalin/status/1542355101247242240
கடந்த ஆட்சி காலத்தை போல பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் என்னுடைய புகைப்படங்களை போடவில்லை. கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் புகைப்படம் அச்சிடப்பட்ட பைகளை வழங்கியவன்தான் இந்த ஸ்டாலின். என்றும் உங்களில் ஒருவன்தான் நான். என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்” என்று பேசினார்.
மேலும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும். இலவச பேருந்து பயணம் என்று சொன்னாலும், 27% இட ஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார் என்று சொன்னாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்றாலும் என் முகம்தான் நினைவுக்கு வரும்” என்றும் கூறினார்.








