தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர், டிஜிபி, ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன், தேர்தல் ஆணையக் குழு 2வது நாளாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான புத்தகத்தை தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டனர். அதனுடன் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேடும் தமிழில் வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர்கள், கொரோனா காலத்தில் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினர். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உடன், தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் என தெரிவித்த மூத்த துணை ஆணையர் உமேஷ் சின்ஹா, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னேற்பாடுகள் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், தேர்தல் செலவினங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வாக்குக்கு பணம், மது, பரிசுப்பொருட்கள் தருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த உமேஷ் சின்ஹா, 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படும் என கூறினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் செலவு தொகையை அதிகரிப்பது தொடர்பாக மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் மூத்த துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்றும் மூத்த துணை ஆணையர் உமேஷ் சின்ஹா விளக்கம் அளித்தார்.