இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தனக்கே உரிய பாணியில், வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை பரிசளித்து, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். கடந்த 2004ஆம் ஆண்டு, இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’7ஜி ரெயின்போ காலனி’.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படம், மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டலான இசையில் உருவான இப்படம், இன்றும் பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக, ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் கடைசியாக இயக்கிய ’நானே வருவேன்’ திரைப்படம், திரையரங்குகளில் பெரிதளவு கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடியில் வெளியான பின்னர் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அவரது அடுத்த படம் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.