நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்த குடியரசு தின விழாவின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம்.
இன்று காலை 10 மணியளவில் போர் நினைவு சின்னத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு `கர்தவ்ய பாதை’க்கு அவர் வருகை தந்தார். பின்பு குடியரசு தலைவர் 10.30 மணியளவில் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசு தலைவரின் முதல் குடியரசு தினம்
குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் குடியரசு தினம் இதுவாகும். திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிய பிறகு அனைத்து படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக எகிப்து பிரதமர்
இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் படாக் அல்-சிசி கலந்து கொண்டார். நம் நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்லாமல் எகிப்து நாட்டின் ராணுவத்தினர் அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரம்மாண்டமாக அமைந்த அணிவகுப்பு
- எகிப்து ராணுவ அணிவகுப்பை கலோனல் ஃபட்டா எல் கரசாவி தலைமையேற்று நடத்தினார். இந்த அணிவகுப்பில் சுமார் 125 வீரர்களுக்கு மேல் பங்கு பெற்றனர்.
- லெப்டினெண்ட் காமண்டர் திஷா தலைமையில் 144 வீரர்கள் பங்குபெற்ற கப்பற்படை அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் சிஆர்பிஎப் பெண் வீரர்கள் நடத்திய அனிவகுப்பு மரியாதையும் பார்ப்போரை வியக்க வைத்தது.
- அக்னிபாதை திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்னிவீரர்களும் இந்த அண்வகுப்பில் கலந்து கொண்டனர்.
- இந்த அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை, அதிநவீன பீரங்கிகளும் இடம்பெற்றிருந்தன.
வண்ணமயமான அலங்கார ஊர்திகள்
- இந்த குடியரசு தினத்தில் 17 மாநிலங்கள் தங்களது அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்தின. ‘பெண் சக்தி’ என்ற மைய நோக்கத்தில் இந்த அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அசாம். மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஜம்மு& காஷ்மீர், குஜராத், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்தின.
- ஆந்திர பிரதேச மாநிலம் ‘பிரபால தீர்த்தம்’ என்ற மையக்கருத்தில் அலங்கார ஊர்தியை வடிவமைத்திருந்தது. உத்தாரகண்ட் மாநிலம் கார்பட் தேசிய பூங்காவை அப்படியே தங்களது அலங்கார ஊர்தியில் வடிவமைத்து இருந்தது. ஜார்கண்ட் மாநிலம் பைத்யநாத் கோவிலை அலங்கார ஊர்தியில் வடிவமைத்து இருந்தது
- தமிழ்நாடு சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் ஒளவையார், வேலுநாச்சியார் உருவங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த ஊர்தியில் பாடகி எம்.எஸ்.சுப்புலெட்சுமி, மூவலூர் ராமமிர்த அம்மையார் ஆகியோர் உருவங்களும் இடம்பெற்றிருந்தன.
- 2020-ம் ஆண்டு நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற கார்த்யாயனி அம்மாவின் சிலையுடன் கேரள அரசின் அலங்கார ஊர்தி அமைந்திருந்தது.
சாகச நிகழ்ச்சிகள்
9 மோட்டார் சைக்கிள்களில் வீரர்கள் செய்த சாகச நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த வீரர்கள் மோட்டார் சைக்கிளிலேயே சென்று ஹியுமன் பிரமிடை அமைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். இந்திய ராணுவத்தின் சார்பாகவும் கப்பற்படை சார்பாகவும் 45 ஐஏப் விமானம் அணிவகுப்பில் பங்கேற்றது. பின்னர் அனைத்து அணிவகுப்புகளும் முடிந்த பின் தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவடைந்தது.