கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 5 அகதிகள் உயிரிழப்பு – பலர் மாயம்!

கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏஜியன்…

கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில் பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் உயிரிழந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதே போல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் 108 பேர் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறி உள்ளது குறிப்பித்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.