விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்திய விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி செயலர் ஸ்ரீதரன்,…

எந்த அனுமதியும் இல்லாமல் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை
நடத்திய விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி செயலர் ஸ்ரீதரன், உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தங்களது கல்லூரிக்கு தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின், 2021-22ம் ஆண்டிற்கான ஆசிரியர்
பயிற்சி வகுப்பிற்கு அனுமதி வழங்குமாறும், மேலும் 2021- 2022 ஆண்டு முதல் மற்றும்
இரண்டாம் செமஸ்டர் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுத அனுமதிக்க
உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கல்வியியல் கல்லூரியில் பல்வேறு குறைபாடுகளால்
இருந்ததால், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பின்னர் , கல்லூரிக்கான அனுமதியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்
2021ல் திரும்ப பெற்றது. ஆனால், இதை எதிர்த்து மனு செய்யவில்லை.

ஆனால், கல்லூரிக்கு அனுமதியில்லாத நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன்
மாதம் வரை பி.எட் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதன்பிறகு அனுமதியின்றி
மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,
மாணவர்களுக்கு முன்மாதிரியான ஒழுக்கம் கற்பித்து வழிகாட்டியாக விளங்க வேண்டிய ,
ஆசிரியர் பணிக்குரியவர்களை ஒழுக்கம் இல்லாமல் நடந்துள்ளனர்.

இந்நிலையில், அனுமதியின்றி 100 மாணவர்களை சேர்த்துள்ள நிலையில் தற்போது இந்த
வழக்கை தொடர்ந்துள்ளனர். மாணவர்கள் மீதான அனுதாபத்தை காட்டி அனுமதி
பெற முயல்கின்றனர். மேலும், 4 செமஸ்டர்களைக் கொண்ட படிப்பில் இதுவரை ஒரு
செமஸ்டரைக் கூட மாணவர்கள் எழுதவில்லை. அதோடு, கொரோனவை காரணமாக
கூறி அப்பீல் ஆணையத்தில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகவில்லை.

அனுமதி இல்லாமல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் எப்படி கட்டணம் வசூலித்தார்கள்
என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதன் விளைவுகளை மனுதாரர் அனுபவிக்க வேண்டும். மாணவர்களிடம் பணம் வசூலிப்பதே கல்லூரியின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது, இதனால், கல்லூரி வங்கிக் கணக்கு வளம் பெற்றுள்ளது என வேதனை தெரிவித்தார் நீதிபதி.

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துவிட்டு, அவர்களை வேறு எந்த கல்லூரிக்கும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர் . விதிகளை பின்பற்றாமல் மீறிசெயல்பட்டு மனுதாரரை இந்த நீதிமன்றம் பாதுகாக்க முடியாது. எனவே, மாணவர்களின் நலன் கருதி மனுதாரர் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களை, வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், அனுமதியில்லாத கல்லூரியின் சான்றிதழ் வெறும் காகிதமாக மட்டுமே இருக்கும்.

எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சட்டப் பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். மேலும், விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவர் , சம்பந்தப்பட்ட மாணவர்களை அணுகி அவர்கள் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை பெற்றுத் தர உதவ வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக , அந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு உத்தரவிட்டு கல்லூரியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.