உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் கடந்த 24 ஆம் தேதி மோதியது. இதில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அதிர்ச்சிக் கொடுத்தது. இதையடுத்து அந்த அணியின் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உட்பட பலர் பாராட்டினார். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இந்தியாவில் சிலர் சமூக வலைதளத்திலும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இது பெரும் சர்ச்சையானது.
இதில் குறிப்பிடும்படியாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி என்பவர், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அந்த பள்ளி நிர்வாகத்தில் புகாரளிக்கப்பட்டதால், அவர் பள்ளியை விட்டு நீக்கப்பட்டார். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதற்காக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







