மணிப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.
பிஷ்னுபூர் மாவட்டம் உகா தம்பாக் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் வன்முறை கும்பல் ஒன்று சோதனை நடத்தி வீட்டில் இருந்து தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் கலவரம் வெடித்தது. உயிரிழந்தவர்கள் மைத்தேயி சமூகத்தினர் என்பதால் அதற்கு பதிலடியாக குகி சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
வன்முறையால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இதனிடையே குட்ரூக் மற்றும் சென்ஜாம் சிராங் ஆகிய இடங்களில் அருகிலுள்ள மலைத்தொடர்களில் இருந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கிராமத் தன்னார்வலர் காயமடைந்தார். பிஷ்னுபூர் காங்வாய் மற்றும் ஃபூகாக்சாவ் பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே மாநிலத்தில் இனக்கலவரங்களில் கொல்லப்பட்ட 35 பேரை சுராசந்த்பூரின் ஹொலாய் கோபி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் அடக்கம் செய்ய குகி-ஜோமி அமைப்பு, பழங்குடியினர் தலைவர்கள் மன்றம், திட்டமிட்டிருந்தது, இதனால் பல மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.