இன்று ஒரே நாளில் 17.70 லட்சம் தடுப்பூசிகள்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 17.70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,…

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 17.70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் உத்தரவுப்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என மொத்தம் ஒரு லட்சம் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 28 மெகா தடுப்பூசி முகாம்களில், 4 கோடியே 12 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு, தமிழ்நாட்டில் இதுவரை 17 லட்சத்து 24 ஆயிரத்து 637 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 42 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு 2வது தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் திட்டத்தில், 12 வயதிற்கு மேற்பட்ட 17 லட்சத்து 70 ஆயிரத்து 41 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 11 கோடியே 4 லட்சத்து 40 ஆயிரத்து 323 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சிறப்பு முகாம் நடைபெற்றதால், நாளை (9-ம் தேதி ) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.