இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் ஜூலை 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஜூலை 8 ஆம் தேதியான இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்களை அடைக்க உத்தரவிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இலங்கை பருத்தித் துறை நீதிமன்ற நீதிபதி கிரசாந்த் பொன்னுத்துரை மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா