பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூடடத்திற்கு பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் இந்த கூட்டத்திற்கு அழைத்திருக்கிற முதலமைச்சருக்கு நெஞ்சார பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற இந்த சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இது சமூகநீதி மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே இதை தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
மத்திய அரசாங்கத்தில் 27 சதவிகிதம் ஓபிசி பிரிவினருக்கு இருக்கிறது, அரசாங்கத்தில் பழங்குடியினருக்கு ஏழரை சதவீதம் தான் எனவே இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவை மாநில அரசு அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பள்ளிக்கல்வி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் அதை அப்படியே மாநில அரசும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே அதை மாநில அரசு பின்பற்றாமல் இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு ரிவ்யூ பெட்டிஷன் போட வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து யார் வழக்கு போட்டார்களோ அவர்கள் தான் மறு ஆய்வு மனுவை போட முடியும். எனவே இதனை அதிமுக செய்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. இப்போது திமுக முடிந்த வகையில் முயற்சிக்கிறது.
இந்த வழக்கை 9 நீதிபதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் இதை விரிவுபடுத்தப்பட்ட நீதிபதிகள் முன் கொண்டு செல்ல கோரிக்கையை மறு சீராய்வு மனுவில் முன்வைக்கும் என்று சொல்லி இருக்கிறது.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் #பி_பி_மண்டல் பரிந்துரைக்கு எதிராக சங்பரிவார்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் பரிணாம வளர்ச்சியே இன்றைய #EWS இட ஒதுக்கீடாகும்.
இது ஓபிசி மற்றும் சமூகநீதிக்கு எதிரானது என்பதை உணர்ந்து செயல்படுவதோடு மண்டலுக்கு சிலைஅமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 12, 2022
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற இந்த சட்டம் ஓ பி சி சமூகத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கிறது இதை எதிர்த்து போராட தேசிய அளவில் அவர்கள் முன் வர வேண்டும். மேலும் 27 சதவிகிதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமான வி.பி மண்டலக்கு நன்றி செலுத்துவது நம் கடமை என்றும், வி.பி மண்டலக்கு தமிழ்நாட்டில் சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் வி சி க வைப்பதாக அவர் கூறினார்.