தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பு விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்ததால், மக்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1ம் தேதி மத்திய அரசின் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதன்பின் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விவாதமும் விவாதம் நடைபெற்றது.
மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று வெள்ள பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார். அயோத்தி ராமர் கோவில் பற்றி இன்று விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசு உரிய அக்கறை செலுத்த வேண்டுமென கோரி திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார். அப்போது அவர் பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.







