தமிழகத்தில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டாவது நாளாக இன்றும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் நிவர், புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு நேற்று தமிழகம் வந்தது.
மத்தியக் குழுவினர் நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர், விஷார் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பபட்ட பாதிப்புகளை கண்டறிந்தனர்.
மணிவாசகம் ஐ.ஏ.எஸ் ஒருங்கிணைப்பில் மத்திய மின்துறை துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய நிதித்துறை இணை இயக்குனர் அமித் குமார், மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். மத்தியக் குழுவுடன் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் வேளாண்மை துறை சுகாதாரத்துறை வருவாய் துறை பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.
53 ஹெக்டேர் பரப்பப்பிலான தோட்டக்கலைப் பயிர்கள், 1,950 ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் அவர்களிடம் எடுத்துக் கூறினர். இரண்டாவது நாளாக இன்று புதுச்சேரியிலும் தமிழகத்தில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் ஆய்வு செய்கின்றனர். இன்னொரு குழுவினர் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.







