பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சுமார் 40 ஆண்டுகளாக இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்த இளையராஜா வெளியேற வேண்டும் என நிர்வாகம் தெரிவித்திருந்ததை அடுத்த இருதரப்பினரும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ’வில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ளவும், ஸ்டியோவுக்குள் தியானம் மேற்கொள்ளவும் தன்னை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்ற நிபந்தனை ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இளையராஜா தரப்பில், பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன் என்றும் தனது பொருட்களை எடுத்துக்கொள்வேன் என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜா செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், இளையராஜா செல்லும் ஸ்டுடியோவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தை கவனிக்க வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஆணையராக செயல்படுவார் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.