அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், 26.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதை அடுத்து, 129.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசினார். வயதான காலத்தில் அவர் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறிய முதலமைச்சர், திரைப்படம் மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கமல், குடும்பங்களை சீரழிக்கிறார் எனத் தெரிவித்தார். மேலும் அவரின் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை, என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
முதல்வரின் இந்த கருத்து குறித்து ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.







