பெரும்பாக்கத்தில் மத்திய குழுவுடன் ஆய்வு செய்ய வந்த செங்கல்பட்டு ஆட்சியரின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, பல்வேறு பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களை காட்டி மாவட்ட நிர்வாகத்தினர் மத்திய குழுவிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினர். பின்பு ஆய்வுகளை முடித்து மத்திய குழுவினர் காரில் புறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் காரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை பார்வையிட வராமல், தற்போது ஏன் வந்தீர்கள் எனக்கூறி மாவட்ட ஆட்சியரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் விளக்கிவிட்டதால் மாவட்ட ஆட்சியரின் கார் புறப்பட்டு சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்