கொரோன வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே பிரிட்டனில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண கொரோனாவை விட 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று கர்நாடக அரசும் இரவு நேர ஊரடங்கிற்குள் நுழைந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக புதிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த இரவு நேர ஊரடங்கை திரும்பப்பெறுவதாக கர்நாடக அரசு தீடிரென அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, இரவு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என்ற பொதுமக்களின் கருத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு பரிசீலிக்கப்பட்டது, அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“







