வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, கடலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. கடந்த 2 நாட்களாகத்தான் இயல்புநிலை திரும்பிக் கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தெற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை நீடிப்பதாகவும், இதன் விளைவாக, மதுரை, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், இது தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பில்லை எனவும், மழையின் தீவிரம் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வரும் 26,27,28 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







