தருமபுரியில் ஆதரவற்ற நிலையில் இறந்த 9 பேரின் சடலங்களை அடக்கம் செய்து, மரியாதை செலுத்திய காவல்துறையினரின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உறவினர்கள் இல்லாமல் அரசு மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கூடத்தில் கடந்த 5 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச துவங்கியதால், அவற்றை புதைக்க தருமபுரி நகர காவல்துறையினர் முடிவு செய்தனர். இதனிடையே உடல்களை எடுத்து செல்ல சுகாதாரத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் முன் வராததால் காவல்துறையினரே, உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று, தங்கள் சொந்த செலவில் அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர். காவல்துறையினரின் இத்தகைய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.







