கணவன் குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் அவரை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். அதில் எதிர்பாரதவிதமாக அவர்களது இரு குழந்தைகளுக்கும் தீக்காயம் பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் சசிகுமார், பிரியா தம்பதிகள். இவர்களுக்கு 6ஆம் வகுப்பு படிக்கும் மகனும்,3 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அப்போது முதல் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இரவு தூங்கி கொண்டிருந்த போது தனது கணவன் மற்றும் 2 குழந்தைகள் மீது பிரியா பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் கணவர் சசிகுமாருக்கு உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இரு குழந்தைகளுக்கும் கை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறியபடி கூச்சலிட்டனர்.இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதபமாக உயிரிழந்தார். குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பிரியா தனது கணவன் தான் என் மீதும் குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் மேலும் குடிபோதையில் சண்டையிட்டு அடித்து வந்ததாலும் சசிகுமாரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் ஆனால் எதிர்பாரத விதமாக குழந்தைகள் மீது நெருப்பு பட்டதாகவும் பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.