நாட்டின் ஒப்பற்ற தேசத் தலைவர்களில் ஒருவரான நேதாஜியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது 125வது பிறந்த நாள் விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது.
நேதாஜி சிங்கப்பூரிலிருந்த போதே இந்தியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க ஐஎன்ஏ என்ற படையையே உருவாக்கி எதிர் தரப்பினரை அச்சம் அடையச் செய்தார். முடியரசுகளுக்கு பிந்தைய இந்தியாவில் இராணுவத்தில் ஒரு பெண் தளபதியாக இருந்தார் என்றால் அது சுபாஷ் சந்திரபோஸின் ஐஎன்ஏ படையில்தான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுதந்திர இந்தியா என்னும் பெரும் கனவை தனக்குள் சுமந்த சுபாஷ் சந்திரபோஸின், “ உங்களின் இரத்தத்தைக் கொடுங்கள், நான் சுதந்திரத்தைத் தருகிறேன்” என்ற வீர முழக்கம், இளைஞர்கள் உணர்வு நரம்புகளை தட்டியெழுப்பியது. ஜெய்ஹிந்த் என்று அவர் முன்னெடுத்த அந்த முழக்கம் தான் இந்தியாவில் பலருக்கும் விடுதலை வேட்கை ஏற்படக் காரணமாகி இருந்தது.
இப்படியாக பல்வேறு வீரதீரச் செயல்களுக்குச் சொந்தக்காரரான நேதாஜியின் பிறந்த நாளை மத்திய அரசு தேசிய வல்லமை தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. எப்பொழுதும் குடியரசு தினவிழாவானது 24ம் தேதியிலிருந்துதான் கொண்டாடப்படும். ஆனால் இம்முறை நேதாஜியைப் பெருமைப்படுத்தும் விதமாக 23ம் தேதியிலிருந்தே குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்த நாளையொட்டி அவரது தியாகத்தைப் போற்றும் விதமாக சமூகவலைத்தளங்களில் அவரைப் போற்றி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஜெயந்தி அன்று அவருக்குத் தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் ” என்று புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
நேதாஜியின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் விதமாக அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட் முன் எழுப்பப்படும் என்று கடந்த 21ஆம் தேதி பிரதமர் அறிவித்தார். சிலை கட்டி முடிக்கப்படும் வரை, நேதாஜியின் ஹாலோகிராம் சிலை இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நேதாஜியின் 125 வது பிறந்தநாளான இன்று அவரது ஹாலோகிராம் சிலை இந்தியா கேட் பகுதியில் பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது.
நேதாஜியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் அங்கீகாரம் கொடுத்ததில் தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி என்று சொல்ல வேண்டும். இன்றிலிருந்து சரியாக 25 வருடத்திற்கு முன்னரே நேதாஜி என்னும் ஒப்பற்ற வீரனுக்குச் சிலை வைப்பதில் முந்திக் கொண்டு அவருக்குப் புகழாஞ்சலி செலுத்திவிட்டார் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி.
15.12.1997 ஆம் வருடம் நேதாஜியின் நூற்றாண்டு விழாவின் போது சென்னை கடற்கரையில் அவரது சிலை தமிழ்நாடு அரசால் திறந்துவைக்கப்பட்டது. வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட அந்த நூற்றாண்டு விழாவில் விடுதலை போராட்ட வீரர்களான நல்ல கண்ணு, சங்கரையா, போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இது மட்டுமல்ல வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு என்பது வரலாற்று உண்மை. சுபாஷ் சந்திர போஷ் ஐஎன்ஏவை தொடங்கிய போது தமிழர்கள் அந்த படையில் அதிக அளவில் இருந்தனர். சுபாஷ் சந்திரபோஸிற்காக பொருளுதவி செய்ததும், அவரது படையில் சேர்ந்து உயிர் நீத்தவர்களும் தமிழகத்தில் இருக்கிறார். இது வரலாற்றில் நடந்த ஒன்று அதனால் தான் சுபாஷ் சந்திரபோஸின் புகழை உலகறியச் செய்யத் தமிழகம் முந்திக் கொண்டது.