இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகிலேயே மிகவும் வெற்றிகரமானது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 18 வயது மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, ஒமிக்ரான் பரவல் காரணமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகிலேயே மிகவும் வெற்றிகரமானது என கூறியுள்ளார். மேலும், நாட்டில் இதுவரை 156.76 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், தங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.