பப்ஜி கேமை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜி உள்ளிட்ட சில செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த செயலிகள் மூலம் பயனர்களின் தரவுகள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பப்ஜி செயலியை இந்தியாவில் ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பப்ஜி கேம் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பப்ஜி மீண்டும் எப்போது அறிமுகம் செய்யப்படும் என பல்வேறு கேள்விகள் எழுந்தது.
இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பப்ஜி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி கேமை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. இதன்மூலம் பப்ஜி பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.







