மேகதாது விவகாரத்தை போலவே முக்கிய பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல்கொடுத்தால் தமிழ்நாட்டை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேகதாது விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு, நடுநிலை தவறியதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். ஒன்றிய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக கொமக தலைவர் கொங்கு ஈஸ்வரன் கூறினார். மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரமாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ’தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து நிற்கிறது’ என்ற அடையாள போராட்டத்தை அறிவிக்கலாம் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கும் என்றும், தமிழ்நாடு அரசுக்கு பாஜக துணை நிற்கும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி குறிப்பிட்டார். இதையடுத்து மேகதாது விவகாரத்தில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கட்சி வித்தியாசமின்றி இப்போது இருப்பது போல் எப்போதும் இருந்தால் மேகதாது பிரச்னையில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய துரைமுருகன், இருமொழிக்கொள்கை, இந்தி எதிர்ப்பு, காவிரி பிரச்னை போன்றவற்றிலும் நாம் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்றார். விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது சரியில்லை என கர்நாடகத்திடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துரைமுருகன், தமிழ்நாடு, மற்றும் கேரளாவின் அனுமதி கிடைத்தால் தான் அணை கட்ட முடியும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி அளித்ததையும் குறிப்பிட்டார்.







