ஜொமேட்டோ நிறுவன சேவை மைய அதிகாரி இந்தி தேசிய மொழி என தெரிவித்ததற்கு திமுக எம்பிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஜொமேட்டோ. இந்நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த உணவு முழுவதுமாக கிடைக்காததால், ஜொமேட்டோ ஆப் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தனது பணத்தை திருப்பி அளிக்கும்படி கேட்டுள்ளார்.
அப்போது அவருக்கு பதில் அளித்த சேவை மைய அதிகாரி, நீங்கள் உணவு ஆர்டர் செய்த உணவகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், மொழி பிரச்னையால் எங்களால் இது தொடர்பாக பேச முடியவில்லை என பதிலளிக்கிறார். அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியாமல் இருந்தால் எப்படி.. தமிழ் தெரிந்த ஒருவரை நியமிக்க வேண்டாமா? நீங்கள் உணவகத்தை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற்று தாருங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரி தேசிய மொழி இந்தி. அதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Vikash67456607/status/1450075223240241153
இது தற்போது பூதாகராமாக வெடித்துள்ளது. சேவை மைய அதிகாரிக்கும், தனக்குமான உரையாடல்களை ஸ்கீரின் சாட் எடுத்து ட்விட்டரில் அந்நிறுவனத்தை டேக் செய்து விகாஷ் பதிவிட்டார். உடனடியாக சமூகவலைதள வாசிகள் ஜொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக #Reject_Zomato என்ற ஹேஸ்டேக்கில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய துவங்கினர். இதையடுத்து சேவை மைய அதிகாரியின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக உங்களது மொபைல் எண்ணை தனியாக மெசேஜில் அனுப்புங்கள் என ஜொமேட்டோ நிறுவனம் அவரது ட்விட்டருக்கு பதில் அனுப்பியது.
இந்நிலையில், தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார், எப்போதில் இருந்து இந்தி தேசிய மொழியானது என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதன் அடிப்படையில் தமிழ்நாடு வாடிக்கையாளர்கள் அடிப்படையான இந்தி தெரிந்திருக்க வேண்டும் என கூறினர்கள் என கேட்டுள்ளார்.
https://twitter.com/drsenthil_mdrd/status/1450123371522387970?s=21
இவரைத்தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என #Hindi_Theriyathu_Poda என்ற ஹேஸ்டேக்கில் காட்டமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1450337778554658818
இந்நிலையில், ஊழியரின் நடத்தைக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவரை பணியிடம் நீக்கம் செய்து விட்டதாகவும் ஜொமேட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.







