ஆஸ்கர் மேடையில் ஏறி தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் உள்ளிட்ட அனைத்து அகாடமி விழாக்களிலும் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது தொகுப்பாளர் கிறிஸ் ராக், தன் மனைவியை உருவ கேலி செய்ததால் மேடையிலேயே ஏறி அவருக்கு‘பெளேர்’ என ஒரு அறையை விட்டார் வில் ஸ்மித். அதுமட்டமல்லாமல் மேடையைவிட்டு இறங்கி கெட்ட வார்த்தைகளிலும் திட்டித்தீர்த்தார். சற்று நேரத்திலேயே தான் நடித்த‘கிங் ரிச்சர்ட்’படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் அதே மேடையில் வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது . பெரிதாக கவனம் ஈர்க்காமல் தொடங்கிய அந்த ஆஸ்கர் விழா இந்த சம்பவத்தின் மூலம் உலகம் முழுவதும் வைரல் ஆனது. இதைக்கண்ட தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பெரும்பாளான தொகுப்பாளர்களுக்கும், நகைச்சுவையாளர்களுக்கும் வேர்த்து விறுவிறுக்க தொடங்கியது. ‘வில் ஸ்மித் மாதிரி ஆளாலுக்கு கிளம்புனா நம்ம எப்படி தொழில் பன்றது’ என்ற அவர்களின் மைண்ட் வாய்ஸ்கள் கூட சத்தமாக கேட்பதாக இணையத்தில் கிண்டலடிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்னொரு புறம், கிற்ஸ் ராக் பேசியது தவறே என்றாலும் வன்முறை எதற்கும் தீர்வாகது என்ற காந்தியவாதிகளின் கருத்துகளும் வலுவாக எழுந்தன. இந்நிலையில், தன்னை விழா மேடையில் வைத்து அறைந்த வில் ஸ்மித் மீது போலீஸில் புகார் கொடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துவிட்டர் கிற்ஸ் ராக். அவரின் இந்த செயல் மிகவும் பக்குவம் வாய்ந்தது எனவும், என்ன இருந்தாலும் வில் ஸ்மித் அப்படி அறைந்திருக்க கூடாது எனவும் பலரும் கூறினர். இதைத்தொடர்ந்து கிறிஸ் ராக்கிடமும், அகாடமியிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித்.
இந்நிலையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்துக்கு அகாடமி சார்பாக எந்த மாதிரியான தண்டனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், அகாடமியிலிருந்து தன்னுடைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித். இதன் மூலம் ஆஸ்கர் விருதுக்கு ‘நாமினேட்’ செய்யப்படும் படங்களை தேர்வு செய்வதிலும், ஆஸ்கர் விருதுக்கான படங்களை தேர்வு செய்வதிலும் தனுக்கு இருந்த அதிகாரத்தை இழந்தார் ஸ்மித். இதெல்லாம் போதாது எனவும் வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது பறிக்கப்படுவதோடு, வரக்கூடிய காலங்களில் அவருக்கு எந்த அகாடமி விருதுகளும் வழங்கக்கூடாது எனவும் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களிடம் அகாடமிக்கு தினமும் போன் கால்கள் வரத்தொடங்கின. கொஞ்சம் விட்டிருந்தால் வில் ஸ்மித்துக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், பிள்ளைக்கு பெண் கொடுத்த வேட்டகத்தார் என அனைவரின் விருதுகளும் பரிக்கக்கப்பட வேண்டும் என்றுகூட கேட்டிருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆகாடமியின் ஆளுநர்கள் குழு ஒன்று கூடி இது தொடர்பாக விவாதித்து முடிவெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘வில் ஸ்மித் ஆஸ்கர் விருது உள்ளிட்ட எந்த அகாடமி விழாக்களிலும் கலந்து கொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது எனவும் அகாடமி விழாக்களில், நேரில் மட்டுமல்லாது காணொளி காட்சிகள் மூலமாகவும் கலந்துகொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், ‘விழா ஒளிபரப்பின் போது வில் ஸ்மித்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக கவனித்து தடுக்க தவறிவிட்டோம். இதுபோன்ற சம்பவங்களுக்கு போதுமான முன்னெச்சரிக்கையோடு இல்லாததற்கு அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த சூழ்நிலையை மிகவும் பக்குவமாகவும் பொறுமையாகவும் கையாண்ட தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஒரு முறை வழங்கப்பட்ட விருதை திரும்ப பறிப்பதற்கான அதிகாரம் அகாடமிக்கு இல்லை என வள்ளுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விருது விழாவில் பங்கேற்பதற்குத்தான் வில் ஸ்மித்துக்கு தடையே தவிர, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவதில் எந்த தடைகளும் இல்லை எனவும், அவருக்கு பதிலாக வேறு யாராவது அவரின் விருதை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.