அனைத்து நடைமுறைகளையும் முடித்தால் ஐ.நா கோப்புகளில் உள்ள இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றம் செய்யப்படும் என ஐ.நா.செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜகவை எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 28 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அந்த கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று பாஜக அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தொடங்கியுள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதே போல் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் இந்தோனேஷியா சென்ற போது, அவரது பயணம் குறித்து வெளியான நிகழ்ச்சி நிரலில் Prime Minister of Bharath என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்து அளிக்கிறார். இதற்கான அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. பெயர் மாற்றம் தொடர்பாக நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்நிலையில், பெயர் மாற்றம் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் டெல்லி முடித்தால் கோரிக்கை ஏற்கப்படும் என்றும், ஐ.நா கோப்புகளில் (un records) உள்ள ‘இந்தியா’ என்ற பெயர் ‘பாரத்’ என மாற்றம் செய்யப்படும் என ஐ.நா.செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.