32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்தது என்ன..?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால் வழக்கில் அடுத்தது என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி தீர்ப்பளித்த நீதிபதி ஜெ. நிஷா பானு “ மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பினை வாசித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி ” ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் அடுத்தது என்ன?

நீதிபதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையில் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்புகளை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மூன்றாவதாக யார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு நீதிபதியை நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் மூன்றாவது நீதிபதி தனியாக இந்த வழக்கை விசாரிப்பார்.

அப்போது மேகலா தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் தனித்தனியாக வாதங்கள் முன்வைக்கப்படும். அதன் பிறகு  மூன்றாவது நீதிபதி பிறப்பிக்கும் தீர்ப்பு தற்போது பிறப்பித்துள்ள தீர்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு, அதில் பெரும்பான்மை முடிவே சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பாக அமையும்.

அந்த மூன்றாவது நீதிபதி பிறப்பிக்கும் தீர்ப்பு, நீதிபதி நிஷா பானு தீர்ப்புடன் ஒத்துப்போகுமேயானால் செந்தில் பாலாஜி சிறையில் அடைத்தது தவறு என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பாக அமையும்.

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்புடன் ஒத்துப்போகுமேயானால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது சரிதான் என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பாக அமையும்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading