”ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கி செல்ல வேண்டும்!” – பிரதமர் மோடி பேச்சு

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என பி-20 உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடி பேசினார். டெல்லியில் நேற்று (அக்டோபர் 12)…

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என பி-20 உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடி பேசினார்.

டெல்லியில் நேற்று (அக்டோபர் 12) தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறும் பி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி  கலந்துகொண்டார்.

அப்போது  பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியா இதுவரை 17 பொதுத் தேர்தல்களையும்,  300 முறை மாநில பேரவைத்  தேர்தல்களையும் நடத்தியிருக்கிறது.  2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மக்கள் எங்கள் கட்சியை மீண்டும் ஆட்சியமைக்க வைத்தனர்.  இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தலாக இருந்தது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் திறன் காரணமாக, ஒரு சில மணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடுகின்றன.

வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.  ஒட்டுமொத்த உலகத்தையும்,  நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம்,  ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அமைதி,  சகோதரத்துவம்,  முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம் இது. அதுமட்டுமல்ல,  இது அனைவரின் முன்னேற்றத்துக்குமான நேரம் என்றும் மோடி கூறினார்.

யஷோபூமி என்று அழைக்கப்படும் துவாரகாவின் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  இதில், சுமார் 27 நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.