ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு…

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த கோர விபத்தில் பகல் 2 மணி நிலவரப்படி  288 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து  ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் தமிழ்நாட்டு அமைச்சர் குழுவிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிக்கையில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்  போக்குவரத்து துறை அமைச்ச சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு இன்று மதியம் சென்றடைந்து, மீட்பு பணிகள் பற்றி கேட்டறிந்தோம். மேலும், பாலசோர் ஃபக்கீர் மோகன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயணிகளிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க பாலசோர் மாவட்ட நிர்வாகம் & மருத்துவர்களிடம் வலியுறுத்தினோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.