நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கி சோதனை செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டவுடன் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக தொடர்வதாகவும், பிரக்யான் ரோவர் 100 மீட்டருக்கும் மேலாக பயணம் செய்து ஆய்வுகளை செய்து வருவதாகவும் கூறினார். அத்துடன், நிலவில் இருள் கவிழ்ந்து வருவதால் ரோவருக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படியே, பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உறக்கநிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரக்யான் ரோவர் இதுவரையிலும் அதற்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டு, உறக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆய்வுக் கருவிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அனைத்தும் லேண்டர் வழியாக பூமிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வரும் செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரிய உதயமாகும் போது சூரிய சக்தியைப் பெறும்.
பிரக்யான் ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் ஸ்விட்ச் ஆன் ஆகும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும்” என்று இஸ்ரோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய லேண்டர் முதன் முதலாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்கிய இடத்தில் இருந்து சிறிது தூரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், 30 முதல் 40 செ.மீ. வரை பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் செயல்பாடு முடிந்த நிலையில் இஸ்ரோ கூடுதல் பரிசோதனை முயற்சியாக விக்ரம் லேண்டரை நகர்த்தி சோதனை மேற்கொண்டுள்ளது.







