வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், நீதிபதி சத்திய நாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி சத்திய நாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், 191 சாட்சிகளிடம் விசாரணை பற்றியும், சந்தேகிக்கும் 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது குறித்தும், 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை மந்த கதியில் இருப்பதாக நீதிபதி சத்திய நாராயணன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் புலன் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.







