கண்ணனின் தாசனாக இருப்பவரை ராமதாசனாக மாற்றியதோ என கருதும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார் கண்ணதாசன். அதே நேரத்தில் தமிழ்க்கடவுளாம் முருகனையும் போற்றிப் பாடியுள்ளார் கண்ணதாசன். பக்தி ரசம் சொட்டும் சில பாடல்களை தற்போது காணலாம்.
வரிக்கு வரி கண்ணனின் பெருமைகளை கூறும் கண்ணன் வந்தான் பாடல் மனதிற்கு நம்பிக்கை தருகிறது. மதங்களை கடந்து மனித வாழ்வின் தேடல்களை உருக்கமாக விளக்கும் அற்புத பாடலாக அமைந்தது. கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா, கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா என இப்படி ஒரு பாடலை தந்தார் கண்ணதாசன். பாடமாக நடத்துவதை விட பாடலாய் பாடினால், அதுவும் மெல்லிசையுடன் பாடலாக தந்தால் மனதில் நீடித்து நிற்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கண்ணபெருமானின் புகழ் பாடிய கண்ணதாசன், லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராமன் எத்தனை ராமனடி பாடலில், தாய்க்கு, தந்தைக்கு, மனைவிக்கு, காதலிக்கு என ஒவ்வொவருக்கும் உரித்தான ராமன் யார் என்பதை வரிகளில் குறிப்பிட்டு தந்திருப்பார். ராமனை வரிசைப்படுத்திய இந்தப்பாடலை ஒரு காலத்தில் பெண் பார்க்க வந்தவர்கள் பெண்ணை பாடச் சொல்லி கேட்பது வழக்கம்.
கண்ணனையும், ராமனையும் பாடி மகிழ்ந்த கண்ணதாசன், தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடு குறித்த பெருமையை, அதன் உட்பொருளை எளிய தமிழில் தந்திருப்பார். பழனியில் நின்றது, சுவாமி மலையில் அமர்ந்தது, திருச்செந்தூரில் எழுந்தது, திருப்பரங்குன்றத்தில் மணந்தது, திருத்தணியில் காந்தர்வ மணம் புரிந்தது, பழமுதிர்ச்சோலையில் பக்தர்களுக்கு காட்சி தந்தது என வரிசைப்படுத்தியிருப்பார் கண்ணதாசன்.
ராமன் என்றாலும், கண்ணன் என்றாலும், முருகப்பெருமான் என்றாலும் அவர்கள் அனைவரும் போதித்தது அன்பு என்ற தாரக மந்திரத்தைத் தானே.
- ஜே.முஹமது அலி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.