மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி ) நடத்திய முதல்நிலைத் தேர்வில் பொதுப் பாடங்களும், திறனாய்வு பிரிவிலும் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியப் பதவியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தகுதியானவர்கள் மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 50,000 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
“இடைக் காலம், தொன்மைக் காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமானதாக இருக்கிறது. திறனறிவு சார்ந்த கேள்விகளும் கடினமானதாக இருந்தது. திறனாய்வு கேள்விகளுக்கான பதில்கள் மிக நீளமானதாக இருந்தது. எனவே என்னால் முழுமையாக பதில் அளிக்க முடியவில்லை” என்று மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
பொதுப் பிரிவு பாடங்களில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டன. திறனாய்வு கேள்வித்தாளில் 80 கேள்விகள் கேட்கப்பட்டன. திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பதில் தாள்களை மட்டுமே யுபிஎஸ்சி திருத்துவதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 46 சதவீதம் பேர், திருச்சியில் 51.5 சதவீதம் பேர், கோயம்புத்தூரில் 50.2 சதவீதம் பேர், மதுரையில் 53.5 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.








