நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி அரசு பணியிடங்களை 2.5 கோடி ரூபாய் விற்றுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி மற்றும் எம்எல்சி போஜ்கவுடா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குமாரசாமி கூறுகையில், “மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி 2 மருத்துவர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஒருவரிடமும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரிடம் லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் எய்ம்ஸ் மற்றும் தேசிய மருத்துவ குழுவிலும் பதவி வாங்கி தருவதாக கூறி இந்த லஞ்ச பணத்தை பெற்றுள்ளார். மத்திய அரசு பணிகள் பணத்துக்கு விற்கப்படுகிறது. இவற்றை உயர்மட்ட அளவில் விசாரணை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போஜ்கவுடா இதுபற்றி கூறுகையில், “பிரகலாத் ஜோஷி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கில் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது யாருடமிருந்து பெறப்பட்டது? அந்த பணத்தை பெற்றதற்கான நோக்கம் என்ன? என்பதை ஜோஷி விளக்க வேண்டும்” என்று போஜ்கவுடா கேட்டுக் கொண்டார். மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை போஜ்கவுடா வெளியிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ட்விட்டர் பதிவிட்ட மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த குற்றச்சாட்டு மக்களை திசைதிருப்பும் வகையில் உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் மருத்துவருக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மருத்துவர் இல்லை. எனது அலுவலகத்தில் பல ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஏன் ஊழியர் பெயரை மறைத்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.