திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தனது முகநூலில் (Facebook) பதிவிட்டுள்ள பதிவு, தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
2021-ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான புதுக்கோட்டையை சார்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக சித்தாந்தங்களை தரவுகளோடு பேசுவதிலும், எழுதுவதிலும் கெட்டிக்காரர். அவர், சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தனது முகநூலில் பதிவிட்ருந்தார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அவரது நண்பரின் மகன் பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற அப்துல்லா வாழ்த்து தெரிவித்து விடைபெறும் போது, நண்பரின் மற்றொரு மகன் விபூதியை டப்பாவை எடுத்து, மாமா என் தம்பிக்கு விபூதி வைத்து ஆசிர்வதியுங்கள் என்று தெரித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இஸ்லாமியரான அப்துல்லா விபூதியும் வைத்து ஆசிர்வதித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து தனது முகநூலில் அவர் எழுதிய பதிவில், “என் நண்பன் ஆனந்த் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நேற்று அவன் பிறந்தநாள். தேர்தல் பணிகளால் நேற்று செல்ல முடியவில்லை. இன்றைக்கு வீட்டிற்குச் சென்று இருந்து விட்டு கிளம்பும் போது அவனது மகன் மாப்பிள்ளை பாரதி அவர்களது இல்லத்தில் இருந்த பூஜை அறையில் இருந்து விபூதி டப்பாவை எடுத்து வந்து என் கையில் குடுத்து “எங்களை ஆசிர்வதியுங்கள் மாமா” என்றான். நானும் அவனுக்கும் அவன் தம்பிக்கும் நெற்றியில் விபூதி இட்டு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனதார அல்லாவை வேண்டினேன். அப்துல்லாவான என்னிடம் “என் மதத்தில் கடைபிடிக்காத, எனக்கு பழக்கமில்லாத” விபூதி டப்பாவை குடுத்து வைத்து விடச் சொல்லக் கூடாது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. அவன் மனதில் அப்பாவின் நண்பனான ஒரு மாமனாக மட்டுமே இருக்கிறேன். இந்த மனநிலையை இந்த மண்ணில் இருந்து அழிக்க நினைக்கும், அகற்ற நினைக்கும் யாராலும் முடியாது” என அவர் அந்த பதிவில், பதிவிட்டுள்ளார்.
இதே பேன்று, கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு சென்ற பெரியாரிடம் கையில் திருநீறு கொடுத்து மணமக்களுக்கு பூசி ஆசிர்வதிக்க சொன்ன போது பெரியாரும் அப்படியே செய்தார். அப்போது, அருகில் இருந்த கல்கி புகைப்படகாரர் “இதை படம் எடுத்து பெரியாரின் இரட்டை வேடம் என்று செய்தி வெளியிடலாமே” – என்ற போது கல்கி அதை தடுத்து, “நாம் தான் அவரை வற்புறுத்தினோம். நம் மனம் கோணக் கூடாது என்பதற்காகவே அவர் அதை செய்தார். அதற்காக அவருடைய கொள்கையை அவர் என்றுமே சமரசம் செய்து கொள்ள மாட்டார்” என்று கல்கி தெரிவித்தார், அந்த நிகழ்வை சம்பந்தபடுத்தி இணையவாசிகள் தற்போது வைரல் செய்து வருகின்றனர்.